இஸ்லாம் என்பது அமைதியின் மார்க்கம். ஒருவரின் அகம்புற ஒழுக்கத்தில் துவங்கி, இல்வாழ்வு, சொத்துரிமை, வியாபாரம் மற்றும் அரசாட்சி வரை அனைத்தையும் மிகத் தெளிவான சட்டங்களைக் கொண்டு சீர்மைக்கு வழி வகுத்திருக்கும் மார்க்கம். மனிதனை சூது, மது, களவு போன்ற சீர்கேடுகளிலிருந்து விடுத்து நெறிப்படுத்தும் மார்க்கம். தர்மத்தை கடமையாக்கிய மார்க்கம். ஒரு மனிதரை தீய செயலின்பக்கம் அழைத்துவிடுவது எளிது, ஆனால் ஒரு நற்செயலை செய்ய வைப்பது எவ்வளவு பெரிய கடினமான வேலை? அவ்வாறு இருக்க திரு நபி (ஸல்) தன் கடும் முயற்சி மற்றும் நற்குணத்தைக்கொண்டு இஸ்லாம் என்னும் புது மார்க்கத்தை லட்சக்கணக்கானோர் ஏற்கும்படி செய்தார்கள். இஸ்லாத்தின் வரவினால், மூடர்களாகவும் முரடர்களாகவும் இருந்த மக்கள் எவ்வாறு பண்பட்டு பகுத்தறிவு பெற்றார்கள் என்பதை இப்புத்தகத்தின் வாயிலாக காணலாம்.
நபி (ஸல்) அவர்களுக்குப் பின், இஸ்லாமியர்களுக்குத் தலைவர்களாக கலீபாக்கள் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களுடன் நெருங்கிப் பழகிய தோழர்களான கலீபாக்கள், தலைவராக இருந்தபோதும் எளிமையும் ஒழுக்கமும் நேர்மையும் உடையவர்களாய் இருந்தார்கள். குறிப்பாக கலீபா ‘உமர் இப்னு அல்-கத்தாப்’ (ரலி) (634-644 கி.பி.) உலகின் ஆகச்சிறந்த தலைலர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். காய்ந்த ரொட்டிகளை வெறும் தண்ணீரில் நனைத்து உண்டு, ஆடை ஆபரணங்களை வெறுத்து ஒதுக்கி, நாட்டிலிருக்கும் ஏழைகளிலும் கீழான ஓர் ஏழையாகத் தமது தனிப்பட்ட வாழ்க்கையை வரையறுத்துக் கொண்டு ஆட்சி செய்தார். இவரே இஸ்லாமிய அரசை விரிவாக்கவும் ஒழுங்குபடுத்தவும் செய்தார். இவ்வாறு ஒவ்வொரு செயலிலும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்களே உன்னதமான மனிதர்களாகவும், ஒழுக்கசீலர்களாகவும் இருந்தால், நபி (ஸல்) அவர்கள் எத்தகைய மாமனிதராக இருந்திருப்பார்கள்? அதனை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டாமா? எனவே இப்புத்தகத்தை நீங்களும் படித்து பிறருக்கும் பகிர வேண்டுகிறோம் என்று இந்நூலின் ஆசிரியர் தனது முன்னுரையில் கூறியுள்ளார்.





Reviews
There are no reviews yet.