“பதினெட்டாம் நூற்றாண்டு வரை பெண்களுக்குக் கல்வி அளிப்பது மற்றும் வேலை வாய்ப்பில் உரிமை வழங்குவது பற்றி சமுதாயத்தின் சிந்தனை வேறு விதமாக இருந்தது.
பெண்களுக்குக் கல்வி அளிக்கப்பட்டால் அவர்கள் விரைவில் விதவையாகி விடுவார்கள் என்று பெண் கல்விக்கு எதிரான கருத்துகளில் ஒன்றாக இருந்தது.
பெண் கல்வி தொடர்பாக சமுதாளத்தின் கண்ணோட்டம் பெண்களுக்குச் சார்பாக இருந்ததில்லை. பெண்கள் சமுதாயத்தில் பெற்றிருந்த இடத்தை பதினெண் கீழ்க்கணக்கு நூலாகிய நான்மணிக்கடிகை கீழுள்ளவாறு பதிலிடுகிறது.
கண்ணிற் சிறந்த உறுப்பில்லை கொண்டானின்
துன்னிய கேளிர் பிறர் இல்லை – மக்களின்
ஒண்மைய வாய் சான்ற பொருள் இல்லை – ஈன்றாளின்
என்ன கடவுளும் இல்
(பொருளுரை – ஒருவனுக்கு கண்ணைப் போன்ற சிறந்த உறுப்பில்லை. குல மகளுக்கு கணவனைப் போல் நெருங்கிய உறவினர் வேறில்லை. பெற்றோருக்கு மக்களைப் போல ஒளியுள்ள பொருள்கள் இல்லை. குழந்தைகளுக்குத் தாயைப் போல கடவுள் வேறெதுவும் இல்லை)
இவ்வாறு குடும்பப் பெண் தனது கணவனை அவன் ஊனமுற்று இருந்தாலும் மன வளர்ச்சியற்று இருப்பினும் நெருங்கிய உறவினர்களுள் முதன்மையானவனாகக் கொண்டாட வேண்டும் என்பது அன்றைய சமூகச் சிந்தனையாக இருந்தது.
தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
(குறள் 58)
என்று வள்ளுவம் பதிவிடுகிறது.
(பொருளுரை – பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்)
இவ்வாறு இலக்கியங்கள் ஆடவர்க்கு முக்கியத்துவம் அளித்து பெண்டிர் அவர்களைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்ற நிலையை முற்காலச் சமுதாயம் கொண்டிருந்தது.
பிறப்பிலிருந்து திருமணம் வரை தந்தையைச் சார்ந்தும், திருமணமானவுடன் கணவனைச் சார்ந்தும் வாழ்வின் இறுதி நிலையில் பெற்ற மக்களைச் சார்ந்தும் வாழ வேண்டும் என்ற அடிமை நிலையிலேயே ஒரு பெண் தனது காலத்தைக் கழிக்க வேண்டியவளாகின்றாள்.
“அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?“ என்ற சமுதாயத்தின் கண்ணோட்டம் நேர் எதிர் நிலை கொண்டு பெண் என்பவள் மானுடத்தின் மிக உயரிய மற்றும் மகத்தான சக்தி. அவளுக்கு உரிய கல்வி மறுப்பது அநீதி. சமுதாய வளர்ச்சிக்கு பெண் கல்வி முக்கியம் என்ற கருத்தை பின வந்த சமுதாயம் ஏற்றது.
“கல்வியில்லாத பெண்கள் களர் நிலம். அந்நிலத்தில் புல் விளைந்திடலாம் நல்ல புதல்வர்கள் விளைவதில்லை“ என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் கூறியுள்ளார். “பெண்கள் விடுதலைக் கும்மி“ என்ற கவிதை வரிகளில்
“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை யென்று
எண்ணி யிருந்தவர் மாண்டு விட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போ மென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்
வேதம் படைக்கவம் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோ மென்று கும்மியடி
சாதம் படைக்கவும் செய்திடுவோம் – தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம்“
என்று பெண் அடிமைத் தனத்திலிருந்து அகற்றப்பட்டனர் என்று தான் கருதியவாறு மகாகவி பாரதியார் பதிவிட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிரான் குற்றங்களை எதிர்த்துப் போராடிய போராளிகளாலும், பெண்ணிய இயக்கங்களின் செயற்பாடுகளாலும், பெண்களுக்கு ஆதரவாக தொடங்கப்பட்ட அரசு நிறுவனங்களாலும், கல்வி நிறுவனங்களாலும், பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பு என்பனவற்றில் போதிய அங்கீகாரம் பெற்றுத் திகழ்கின்றனர். இன்று பெண்கள் சாதனை புரியாத துறைகளே இல்லை எனுமளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கின்றனர்.
இவ்வாறு இன்றைய பெண்கள் பல்வேறு துறைகளிலும் தங்கள் பங்களிப்பை நல்கி குடும்பப் பொருளாதாரத்துக்குத் துணை நின்றும், ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குகின்றனர் என்பது போற்றத்தக்க நிலையாகும்“, என்று இந்நூலின் ஆசிரியர் தனது முன்னுரையில் இந்நூலைப் பற்றி கூறியுள்ளார்.





Reviews
There are no reviews yet.